Monday, March 29, 2010

மருந்து கடைகளுக்கு சுளுக்கு...

ஊடகம் எத்தனை சக்தி வாய்ந்தது என்பதை நித்தியானந்தா மற்றும் போலி மருந்து மோசடி செய்தி மூலம் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. ஊடக செய்திகளை வைத்து தான் அரசு இயந்திரம் விழித்திக் கொள்கிறது என்றால், அரசு ஊழியர்கள் என்ன தான் செய்து கொண்டிருக்கிறார்கள்? தமிழகம் முழுவதும் மருந்து கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில் பலர் சிக்கி இருக்கிறார்கள். ஆக மருத்துவ துறை அதிகாரிகள் முறையாக தங்களது பணியை செய்திருந்தால் இத்தனை உயிரிழப்புக்களும் நடந்திருக்காது, அரசுக்கும் நெருக்கடி வந்திருக்காது. பொது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியிருக்கும் மோசடி மருந்து தொழிலானது எப்போதோ முளையிலேயே கிள்ளி எறியப்பட்டிருக்கும்.
-சின்னப் பையன்

முடிஞ்சா சிரிங்க...

இயக்குனர்: படம் முழுசும் நம்ம ஹீரோ தண்ணி அடிச்சுகிட்டே இருக்கான். இதான் கதை. இந்த படத்துக்கு என்ன பேரு வைக்கலாம் சார்?

தயாரிப்பாளர்: ம்ம்ம்... வாந்தினு வைங்க.
-சின்னப் பையன்





Friday, March 26, 2010

அம்மா... !

மண்புழுவோ,மனிதனோ!
குள்ளநரியோ,கொம்பேறி மூக்கனோ!!
அருகம் புல்லோ,ஆழமரமோ!!!
எதுவாகிலும் படைத்து,
வரண்டு கிடந்த இந்த பூமிப் பந்தை,
பல வகையும் வாழும்
உயிர்க்கோளம் ஆக்கியவள்?
அம்மா...
-சின்னப் பையன்

கொச்சை நீதிமன்றம்

குஷ்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் அசிங்கமான பல கேள்விகளை கேட்டுள்ளது. இளம் பெண்கள் திருமணத்திற்கு முன்பு உடல் இன்பம் கொள்ள விரும்பினால் தக்க பாதுகாப்புடன் நடந்து கொள்ளுங்கள் என்பது குஷ்புவின் அறிவுரை. இதை எதிர்த்து வழக்கிட்ட வழக்கறிஞரை கேள்வி கேட்டு தாளித்த நமது மதிப்பிற்குரிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எழுப்பிய வினாக்களை கீழே பாருங்கள்.
1) குஷ்புவின் பேச்சால் நீங்கள் பாதிக்கப்பட்டீர்களா?
2) உங்கள் குடும்ப பெண்கள் யாரும் குஷ்புவின் பேச்சை கேட்டு வீட்டை விட்டு ஓடிவிட்டார்களா?
3)உங்களுக்கு பெண் குழந்தைகள் இருக்கிறார்களா?

இது போன்ற பல அற்புத கேள்விகள் அதில் அடக்கம். நீதிபதிகளை பார்த்து நான் கேட்கிறேன். குஷ்பு பேச்சு யாரையும் பாதிக்காது என்று சொன்னால் சினிமாவில் வரும் புகை பிடிக்கும் காட்சிகளும் யாரையும் பாதிக்காது தானே? பிறகு எதற்கு அதை தடுக்க சட்டம்? பாலியல் காட்சிகள் யாரையும் பாதிக்காது என்றால் பிறகு எதற்கு தணிக்கை துறை? குஷ்பு சமுகத்தில் பிரபலமான நபர். அவரின் பேச்சு நமது சமூகத்தால் நிச்சயம் கவனிக்கப்படும். ஒருவேளை குஷ்புவின் ஆலோசனையின் படி நமது வீட்டு பெண்கள் எல்லாம் கிளம்பி விட்டால் இந்த தேசத்தின் நிலை என்னவாகும்? நமது குடும்ப ஒழுக்க முறை சந்தி சிரிக்காதா? குஷ்புவின் பேச்சு நமது பெண்களுக்கு அறிவுரை என்று சொல்வதை விட நமது கலாச்சாரத்தை கேள்விக்கு உள்ளாக்கி விட்டார் என்பதே உண்மை. இதில் நீதிபதிகளின் பொறுப்பற்ற கேள்விகள் கண் மூடித்தனமானவை.
-சின்னப் பையன்

Monday, March 22, 2010

கிரிக்கெட்'டு...

விளையாட்டு என்பது ஒரு தேசத்தின் அடையாளம். கஞ்சிக்கே வழி இல்லாத நாட்டில் கூட விளையாட்டில் வெற்றி பெறுவது ஒரு தன்மானப் பிரச்சனை. ஆனால் இந்த பாலாய் போன இந்தியாவில் தான் விளையாட்டு என்பது விளையாட்டுக்கு கூட அரசால் மதிக்கப் படுவதில்லை. விளைவு பணக்காரர்களின் பிடியில் விளையாட்டு. இந்த தேசத்தின் புகழை உயர்த்தி பிடிக்க வேண்டிய நமது வீரர்களின் கரங்கள் இன்றைக்கு பணத்திற்காக கோக்குகளையும், பெப்சிகளையும், மல்லையாக்களின் சாராய பாட்டில்களையும் விற்பனை செய்யும் சேல்ஸ் மேன்களாக மாறிப் போனது மிகப் பெரிய வேதனை. ஐ.பி.எல் போட்டிகளை சந்தை படுத்துவதில் வெற்றி அடைந்த லலித் மோடி மீண்டும் கோடிகளை குவித்திருக்கிறார். நமது புனே மற்றும் கொச்சி நகரங்களை அடிப்படையாக வைத்து நடைபெற்ற ஒரு பேரத்தில் 3200 கோடி பணத்தை அள்ளியதன் மூலம் எனக்கு எழும் ஒரு கேள்வி, இந்த நகரங்களின் பெயர்களை விற்பனை செய்ய இவருக்கு யார் அதிகாரம் கொடுத்தது? உலக பணக்காரர்களின் பொருட்களை விற்பனை செய்ய, நமது அப்பாவி வீரர்களின் திறமைகள் மோடி போன்ற தரகர்களிடம் அடகு போனதை இங்கு யார் அறிவார்? ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர் வினை உண்டு. வேகமாக ஓடும் ஒரு பொருள் விரைவாக அதன் சக்தியை இழக்கும். அதில் ஐ.பி.எல் கிரிக்கெட்டும் அடக்கம்.


-சின்னப் பையன்

Saturday, March 20, 2010

தீராத விளையாட்டுப் பிள்ளை...

விழுப்புரத்தை சேர்ந்த வாசு புதிய முறையில் தனது திருமணத்தை சமீபத்தில் நடத்தியிருக்கிறார். அவருக்கு தற்போது ஆறு குழந்தைகள். ஆனால் அனைத்தும் அவரின் திருமணத்திற்கு முன்பே பிறந்தவையாம். அதிலும் இரு பெண்களுடன் திருமணம் செய்யாமலே இத்தனை காலம் குடும்பம் நடத்தியிருக்கிறார். அவர்கள் இருவரும் அக்காளும் தங்கையுமாம். சபாஷ். இருவரையும் மனதார காதலிப்பதாக கூறும் இவர், இத்தனை ஆண்டுகாலமாகவும் செய்து கொண்டிருந்தது காதலா அல்லது கள்ளகாதலா என்பதை அவர் தான் விளக்க வேண்டும். தனது குழந்தைகளுக்கு காதணி விழா நடத்தி மாமன் சீர் வாங்க முனைந்த இவருக்கு, தனது திருமணத்தை நடத்திக் கொள்வதில் அத்தனை நாட்டமில்லையாம். ஆனாலும் பலரின் கட்டாயத்தின் பேரில் போனால் போகுது என்று, தற்போது தான் தனது காதலிகள் இருவரையும் முறைப்படி தாலி கட்டி மனைவிகள் ஆக்கி இருக்கிறார், இந்த புதுச் சட்டை போட்ட பழைய மாப்பிள்ளை.. அட ராமா! திருமணத்தில் எத்தனையோ வகைகள் இருக்க, இது எந்த வகை என்பதை விபரம் அறிந்தவர்கள் விளக்கட்டும்.
-சின்னப் பையன்

Friday, March 19, 2010

மம்மி என்றால் அம்மா...

தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கை வந்து விட்டது. என்ன இலவசம் வரப் போகிறது என ஒவ்வொரு தமிழ் மகனும் நாக்கை சப்பு கொண்டிருக்க, இதோ வந்து விட்டது பத்து லட்சம் ஆங்கில அகராதிகள். கலைஞர் என்ன கொடுப்பார் ஏது கொடுப்பார் என்று ஏக்கத்தோடு காத்திருந்த எம்மை ஏமாற்றி விட்டீர்களே அய்யா! ஒரு வேலை இந்த ஆண்டே தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் என்ற கணிப்புகள் பொய் தானோ?
-சின்னப் பையன்

Thursday, March 18, 2010

சாலையை மறந்த ஓட்டிகள்...

அன்பு ஊர்தி ஓட்டிகளே, உங்களையும் நம்பித்தான் இந்த உலகமே ஓடிக்கொண்டிருக்கிறது. அதிலும் லட்சோப லட்சம் பள்ளி இளம் சிட்டுக்களை உங்களிடம் விட்டுவிட்டு நாங்கள் வீட்டில் நிம்மதியாக இருப்பதில் உங்களுக்கு உடன்பாடு இல்லையா? அவசர அவசியத்திற்காக கொண்டு வரப்பட்ட செல் பேசிகளை, சாலையில் ஊர்தியை இயக்கி கொண்டே நீங்கள் கதைப்பதில் அத்தனை இன்பமா உங்களுக்கு?. உங்களை நம்பிய எங்களின் பல குடும்பங்களை இன்று கண்ணீரும் கம்பலையுமாக உலவ விட்டு விட்டீர்களே! இது தான் நீங்கள் எமக்கு அளிக்கும் பரிசா? எம் குடும்பத்தில் ஒருவராக எங்கள் பயணத்தில் வலம் வரும் நீங்கள், எங்களை இப்படி மீள முடியா சோகத்தில் அடிக்கடி ஆழ்த்துகிறீர்களே! நீங்கள் அடிக்கடி பலி கொடுக்கும் எம் பிஞ்சுகளை எந்த அரக்க தெய்வத்திற்கு காணிக்கை ஆக்க வேண்டுதல் வைத்திருந்தீர்கள்? அப்படி என்றால் நீங்கள் எல்லாம் சாலைகளில் நரபலி செய்து வைக்கும் இடைத் தரகர்களா? எங்களின் குடும்ப செல்வங்களின் உயிர்களை சாலையில் அடகு வைத்து நீங்கள் கதைப்பது அத்தனை அவசியமா? அதைப் பற்றி நீங்களே இனி முடிவெடுங்கள்.

-சின்னப் பையன்

Tuesday, March 16, 2010

மாயா(அ)வதி

இந்தியாவின் மிகப் பெரிய மாநிலத்தின் முதல்வரான மாயாவதி ஒரு இரும்புப் பாவை என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் அவருக்கு சமீப காலமாக என்ன ஆனது? கோடிகளை இறைத்து தனக்கு தானே சிலைகள் வைத்துக் கொள்வதும், அதற்காக நீதிமன்றத்தில் குட்டுப்படுவதும், எதிர்க்கட்சிகளின் வாய்க்கு சூப்பர் அவலாகவும் மெல்லப்படுகிறார். ஆனாலும் அவரின் ஆடம்பர போக்கு எதுவும் குறைவதாக இல்லை. கோடிக்கணக்கில் செய்யப்பட்ட ஒரு பண மாலையை சமீபத்தில் அணிந்து கொண்டதன் மூலம் மீண்டும் ஒரு பலத்த சர்ச்சையில் சிக்கி கொண்டுவிட்டார். நமது தேசத்தை ஆளத் துடிக்கும் இந்த தலித் பெண்மணிக்கு, சினிமா தனமான வரலாற்று பிழைகள் வரிசையில் நிற்பது வேதனை. அதிகாரத்தை ஆடம்பரமாக மாற்றிக் கொண்டவர்கள் நாளடைவில் காணாமல் போயிருக்கிறார்கள். அதை தலித் மாயா வெல்வாரா? காத்திருப்போம்.
-சின்னப் பையன்

Sunday, March 7, 2010

கைப்பாவை மசோதா...


மகளிர் இடஒதுக்கீடு மசோதா எப்படியோ நிறைவேற்ற போகிறார்கள், வாழ்த்துக்கள். ஆனால் இந்தியா போன்ற பிற்போக்கு தனமான மக்கள் வாழும் நாட்டில், பெண்கள் என்ன தான் பெரிய அதிகாரத்திற்கு வந்தாலும் அவர்களை பின்னால் இருந்து ஆட்டிவிக்க போகிறவர்கள் ஆண்கள் தான். தற்போது பல இடங்களில் உள்ளாட்சி பதவிகளில் இருக்கும் பெண்களின் உண்மை அதிகாரம் அவர்களின் கணவன்மார்களிடம் தான் சிக்கி கிடக்கிறது. நமது ஜனாதிபதி பிரதீபா பாட்டில் கூட இதற்கு விதி விலக்கல்ல (ஆனால் இதில் சோனியாவிற்கு விதிவிலக்கு தருகிறேன். அதற்கு பல காரணங்கள் உண்டு. முடிந்தால் யூகித்து கொள்ளுங்கள்). ஆக வராது வந்த மாமணியாக வரப் போகும் பெண்கள் இட ஒதுக்கீட்டு மசோதா உண்மையிலேயே பெண்களுக்கு அதிகாரத்தை தரும் வகையில் நடைமுறைக்கு வந்தால் அது தான் அவர்களுக்கு பெரிய வெற்றி.
ஆனால் சென்னையில் மெட்ரோ பேருந்துகளில் பயணிக்கும் போது மகளிர் இருக்கைகளை பயன்படுத்தும் எந்த வயது ஆண்களையும் துச்சமாக மதித்து, ஈவு இரக்கம் இல்லாமல் அவர்களை எழுப்பி விட்டு அந்த ஊர் பெண்கள் நடந்து கொள்ளும் விதம் மகா கொடுமை. இதை பார்க்கும் போது தான் பெண்களுக்கு இட ஒதுக்கீடு தேவையா என எனக்கே எண்ணத் தோன்றுகிறது.

-சின்னப் பையன்

Thursday, March 4, 2010

உடன் பிறப்பே...


நித்தியானந்தா விசயத்தில் தொலைக்காட்சிகள் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என முதல்வர் இலை மறை காய் மறையாக கருத்து தெரிவித்துள்ளார். காலங்கடந்த அவரின் இந்த அறிக்கையை பார்த்தால், ஒரு வேலை மீண்டும் மீண்டும் ஒளிபரப்பட்ட அந்த காட்சிகள் முதல்வருக்கே அலுப்பை தந்து விட்டதால் தான் தடை விதிக்க கோரி இருக்கிறாரோ என்னவோ?
-சின்னப் பையன்

Wednesday, March 3, 2010

நாறிக் கிடக்கும் தமிழ் ஊடகங்கள்!!!


தமிழ் ஊடகங்கள் தனது பொறுப்புக்களை மறந்து சமீப காலங்களாக, நான்கு சுவற்றுக்குள் விளக்கு பிடித்து கொண்டிருப்பது வேதனை. பொதுவாக அச்சு ஊடகங்கள் தங்களது வியாபார அரிப்பிற்காக தொடர்ந்து இப்படி செய்துகொண்டிருக்கின்றன. எத்தனையோ சமூக கடமைகள் வரிசையில் நிற்பதை புறந்தள்ளி விட்டு, காம சல்லாபங்களை மட்டுமே பிரதான படுத்தி அலசுவது தேவையற்ற ஓன்று. இதில் தொலைக்காட்சிகளும் களமிறங்கி பச்சை (ஊதா) பதிவுகளை வெட்கமில்லாமல் நமது வீட்டுக்குள் ஊடுருவல் செய்வதை தடுக்காமல், அரசாங்கமும் வேடிக்கை பார்ப்பதை என்னவென்று சொல்வது?திரைப்படங்களில் கூட தடை செய்யப்படும் காட்சிகள் இன்றைக்கு தடை ஏதும் இல்லாமல் தொலைக்காட்சிகளில் விரிவது மாபெரும் அசிங்கம். இந்தவித செய்திகளை தொடர்ந்து வெளியிடுபவர்களுக்கு, சமூக அக்கறை இப்பதாக காட்டிகொள்வது எவரெஸ்ட் உயர நாடகம். உண்மையை சொல்லப்போனால் ஊடக வியாபாரிகளுக்கு நித்தியானந்தா போன்றவர்கள் தான் பொன் முட்டை இடும் வாத்துக்கள். அப்படி பார்த்தால் இவர்களை விட நித்தியானந்தா எவ்வளவோ மேல்.
-சின்னப் பையன்

டெல்லியில் வேட்டி...


நமது உள்துறை அமைச்சர்
ப.சிதம்பரம், தமிழனின் அடையாளமான வேட்டியில் மட்டுமே தலைநகரில் வலம் வருகிறார். நாட்டின் மிக உயர்ந்த பொறுப்பில் இருக்கும் அவரின் இந்த கலாச்சார போக்கு, டெல்லியில் லட்சக்கணக்கான குர்தாக்கள் மத்தியில் தமிழர்களான நமக்கெல்லாம் பெருமை பரப்பும் வேலை தானே. சபாஷ்.
-சின்னப் பையன்

இது தான் நாகரீகம் ...


மார்ச்-03


ஆளும் கட்சியான காங்கிரசும், எதிர்கட்சிகளும் விலைவாசி குறித்து நாடாளுமன்றத்தில் கடுமையாக மோதிக்கொண்டன, ஆனால் நாடாளுமன்றத்துக்கு வெளியே அனைத்து கட்சியினரும் பரஸ்பரம் அன்பை பகிர்ந்து கொண்டது நாகரிக அரசியலை காட்டியது. இதை தான் நான் தமிழக அரசியல்வாதிகளிடம் எதிர்பார்க்கிறேன் . (படத்தில்: காங்கிரசின் அபிஷேக் சிங்வி, ஐக்கிய ஜனதா தளத்தின் சரத் யாதவ், மற்றும் பி .ஜே.பி யின் ராஜ்நாத் சிங். நன்றி -தினகரன்)