Saturday, January 21, 2012

எனக்கு ஒரு பெருத்த சந்தேகம்????????



நான் அடிக்கடி பத்திரிகைகளில் படித்தும், தொலைக்காட்சி மற்றும் வானொலிகளில் பார்த்தும், கேட்டும் ரொம்பவே யோசித்த வார்த்தை ஒன்று உண்டு. அது,

வரலாறு காணாத பாதுகாப்பு.

அது என்ன வரலாறு காணாத பாதுகாப்பு? அப்படி வரலாறு கண்ட பாதுகாப்பு தான் என்ன? அதுவும் ஆண்டு முழுவதும் வரும் முக்கிய தினங்கள் குறித்த பாதுகாப்பை  நமது ஊடகங்கள் இப்படி தான் வர்ணிக்கின்றன. (எ.கா: வரும் 26-ம் தேதி குடியரசு தினத்தை ஒட்டி இந்திய தலைநகர் தில்லியிலும் வரலாறு காணாத பாதுகாப்பாம்) ஆக ஓர் ஆண்டில் இத்தனை முறையா வரலாறு காணாத பாதுகாப்பு வரும்? அப்படி பார்த்தால் இது ஒரு கின்னஸ் சாதனை ஆகிவிடாதா?ஒரு மிகைப்படுத்தல் என்பதற்காக இப்படி ஒரு பொய் மூட்டையை தேன் தடவியா அவிழ்த்து விடுவது? அதுவும் இந்த ஒரே அர்த்தமற்ற உவமையை நமது தமிழ் செய்தியாளர் உலகம் ஏன் தொடர்ந்து சொல்கிறது? அதை மாற்ற முடியாதா?  அதை இன்னும் அழகாய் சொல்வோமே! (வரலாறு காணாத பாதுகாப்பு என்பதைவிட, அதிஉயர் பாதுகாப்பு என்பது எப்படி?)

Thursday, January 12, 2012

வரலாற்றை திருத்த முயலுகிறாரா ஜெ?



ஜெயலலிதாவின் சமீபத்திய நன்றிக்கடன் செலுத்தும் அறிவிப்பு இது. முல்லை பெரியாறு அணையை தமது குடும்ப சொத்தினைக் செலவிட்டுக் கட்டி, இந்திய மக்களின் நலனில் மிகுந்த அக்கறை காட்டிய கர்னல் பென்னி குவிக் நினைவாக ஒரு கோடி ரூபாய் செலவில் அவருக்கு மணிமண்டபம் அமைக்கபடும். அதன் திறப்பு விழாவுக்கு பென்னியின் பேரன் அழைக்கப்படுவார்.( பாவம் பென்னியின் பேரன் யாரென்று தெரியவில்லை போலு...ம். காரணம் அரசின் அறிவிப்பில் பேரனின் பெயர் இடம்பெறவில்லை. இந்த அறிவிப்பாவது அந்த பேரனுக்கு சொல்லப்பட்டதா என்பதும் சந்தேகம் தான்)



சரி இதில் என்ன ஜெ-யின் வரலாற்றுப்பிழை வந்துள்ளது? நன்றி மறப்பது நன்றல்லவே! அதும் தமிழ்நாட்டில் என உங்களுக்கு எண்ணத் தோன்றும். சரி கீழே படியுங்கள். இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆண்ட பொழுது, அவர்கள் நம்மை அடிமைப்படுத்தி வைத்து இருந்தனர். வாய்ப்பூட்டு சட்டம் போட்டனர். ஜாலியன்வாலாபாக்கில் ஜெனரல் டயர் உத்தரவில் ஆங்கிலப்படை கண்மூடித்தனமாக சுட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பலி. அத்துடன் இந்தியாவின் அரிய பொக்கிஷங்களை எல்லாம் அவர்கள் களவாடி சென்று இங்கிலாந்தை பணக்கார நாடாக்கினர். மேலும் பாரதத்தாயின் புதல்வர்களை ஆங்கிலேயர்கள் சொல்லெனா துயரத்துக்கு ஆளாக்கி கொடுமைப் படுத்தினர் என்பது தான் பள்ளியில் நான் மனப்பாடம் செய்து படித்த வரலாறு. அதையே தான் இப்பொழுது எனது உடன்பிறப்புகளும் படிக்கின்றனர். ஆக பிரிட்டீஸார் அனைவருமே கொடியவர்கள் என்று தான் நான் படித்த வரலாறு எனக்கு விளம்பியது. வரலாறு இப்படி இருக்க, நம்மை அடிமைப்படுத்தி வைத்து இருந்த ஆங்கிலேயனின் ஒரு சேவகனுக்கு மணிமண்டபமா? அதுவும் வெள்ளையர்களை அடித்து விரட்டிய பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் பிறந்த மண்ணிலா? யோசியுங்கள். எனது இந்த கேள்வி நியாயம் தானா? அல்லது உண்மை வரலாற்றை மறைத்து, இந்தியாவின் அறிவுஜீவிகள் நமக்கு பொய் வரலாற்றை கற்பித்து வந்துள்ளனரா? அப்படியானால் ஆங்கிலேயர்கள் உண்மையில் நல்லவர்களா? யார் இங்கே குற்றவாளி?