முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சின்னப்பையனின் மனம் திறந்த மடல்.
வணக்கம் அம்மா. விசயத்துக்கு நேரடியாக வருகிறேன்.
தொடர் தேர்தல் வெற்றிகளின் மூலம் தமிழக மக்களாகிய நாங்கள் உங்களை அசைக்க முடியாத இடத்தில் வைத்திருக்கிறோம்.. சொல்லப் போனால் தமிழர்களின் கடைசி புகலிடம் நீங்கள் தான். ஆனால் நீங்களும் அதை தவறாக கையாண்டால் என்ன செய்வது? அல்லது உங்களை யாரும் கேள்வி கேட்டுவிட முடியாது என்ற இறுமாப்பா?
நீங்கள் எதையெல்லாம் செய்ய மாட்டீர்கள் என்று நாங்கள் நம்பினோமோ அதை தான் முதலில் செய்ய தொடங்கினீர்கள். கடந்த ஆட்சியில் கருணாநிதி அரசால் 1200 கோடியில் கட்டப்பட்டு அண்ணாசாலையின் அடையாளமாக திகழ்ந்த புதிய தலைமை செயலகத்துக்கு வந்தவுடன் சங்கு ஊதினீர்கள், பொறுத்துக்கொண்டோம். அடுத்ததாக சமச்சீர் கல்வி திட்டத்துக்கு சங்கு ஊத நீங்கள் எடுத்த பெரு முயற்சி , நீதியின் பெயரால் தோற்கடிக்கப்பட்டததே. இந்த வீண் வேலை தேவை தானா?
108 என்ற அவசர ஊர்தி திட்டம் முன்பு போல செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. அதை முடக்க வேண்டிய அவசியம் என்ன? இந்நிலையில் அண்ணா நூற்றாண்டு விழா நூலகத்தையும் முடக்கிவிடுவது என நீங்கள் திட்டம் போடுகிறீர்களே! இது என்ன நியாயம்? தமிழக வரலாற்றில் இடம் பிடிக்க கருணாநிதி கொண்டுவந்த திட்டமாக அது விளங்கினாலும் அதை அப்பட்டமாக முறியடிக்க நீங்கள் போடும் நாடகத்தை மக்கள் ரசிக்கவில்லை அம்மா. உங்களின் இந்த விபரீத எண்ணம் நீதிமன்றத்திடம் மீண்டும் ஒரு அவமானத்தை பெற்று தரலாம்.
உங்களுக்கு கருணாநிதியை பலி வாங்கும் எண்ணம் இருந்தால் அதற்கு ஆயிரம் வழிகள் உண்டு என்பதை அறிந்தவர் நீங்கள். ஆனால் ஒரு வல்லூறை பலி வாங்க துடிக்கும் உங்களின் எண்ணம், தவறான திசை நோக்கி செல்வதை நீங்கள் உணருகிறீர்களா? உங்களின் இந்த தவறான பாதை அந்த வல்லூறை தியாகி ஆக்கி விடப்போகிறது. அதை முதலில் உணருங்கள்.
இது போன்ற காரியங்களில் உங்களை இயக்குவது யார்? நீங்களே தானா? அல்லது உங்களிடம் இருக்கும் புல்லுருவிகளா? நீங்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் கிடக்கிறது. அதை முதலில் கையில் எடுங்கள். வீணாக சாக்கடையில் காலை விட்டு அதை கழுவ தண்ணீருக்கு ஓட வேண்டாம்.
நீங்கள் ஆட்சிக்கு வந்து இரண்டே மாதங்களில் மின்வெட்டை போக்குவதாக சொன்னீர்களே, அது குறித்த உங்கள் பதில் என்ன? விலைவாசியை குறைத்து விடுவதாக வீதிக்கு வீதி பேசீனீர்களே அது வெறும் வார்த்தைகள் தானா? இது பற்றியெல்லாம் ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட நீங்கள் தயாரா?
ஒன்று மட்டும் மறுக்க முடியாத உண்மை. உங்களுக்கும் இந்திய வரலாற்றில் அசைக்க முடியாத இடமுண்டு. அதை வலுப்படுத்திக் கொள்ள இன்னும் ஆக்கப்பூர்வமாக சிந்தியுங்கள். வீணாக வரலாற்றின் கருப்பு பக்கங்களை அலங்கரிக்க முயற்சிக்க வேண்டாம். அதை கருணாநிதி பார்த்துக் கொள்வார். உங்களின் அபார சிந்தனை அறிவை நல்ல திசைநோக்கி திருப்புங்கள். மக்களின் விருப்பம் எதுவென்று அறியுங்கள்? அதை நிரப்புங்கள். அது ஒன்றே தமிழகம் தாண்டி இந்திய மக்களின் அசைக்க முடியாத தலைவியாக உங்களை அலங்கரிக்கும்.
-சின்னப்பையன்