Thursday, November 24, 2011

கூடங்குளம்...! இடிந்தகரை...! என்ன செய்தால் தேவலாம்?

                                                                                    
கூடங்குளம் அணுமின் திட்டம்! யாரை நம்பியோ ஏறத்தாழ ரூபாய் 14000ம் கோடியை கடலில் (கடலுக்கு அருகில்) கொட்டியாகி விட்டது. இதோ.. அதோ என்று கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கே மின் உற்பத்தி தொடங்குவது இழுத்துக் கொண்டே செல்கிறது (இதற்கான காரணத்தை போராளி உதயகுமார் தரப்பு தமது 50 கேள்விகளில் ஒன்றாக கேட்டதா என்பது எனக்கு தெரியாது). இதையெல்லாம் அப்பகுதி மக்கள் சட்டை செய்யாமல் தான் இருந்தார்கள். ஆனால் நடுவில் என்ன நடந்தது?மக்கள் ஏன் வீதிக்கு வந்து போராட்டம் தொடங்கினார்கள்? அதுவும் ரொம்ப தாமதமாக.

போராட்டம் ஒரு பக்கம் இருக்கட்டும். மத்திய மாநில அரசுகளின் பேச்சுவார்த்தை ஒருபக்கம் இருக்கட்டும். நடுவில் காமெடித்தனம் காட்டும் அமைச்சர் நாராயணசாமி எதாவது ஒருபக்கம் இருந்துவிட்டு போகட்டும். என்மனதில் தோன்றும் ஒரு தீர்வை இங்கே சொல்கிறேன். முதலில் கூடங்குளம் எப்படியும் இயங்கியாக வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து எனக்கு இல்லை.

ஆனால் அந்த சிவபெருமானோ அல்லது ஏசு பெருமானோ வந்து சொன்னாலும் பாதுகாப்பு விசயத்தில் நாங்கள் நம்பிக்கை கொள்வது இல்லை என்பதில் உதயகுமார் தரப்பு தெளிவாக இருக்கிறது. ஆக அந்த முயற்சி இங்கு அவசியம் இல்லை. அடுத்தது மீனவர் பிரச்சனைக்கு வருவோம். கூடங்குளம் அணுமுன் திட்டத்தால் மீன்பிடி தொழில் பாதிக்கப்படும் என மீனவர்கள் கருதினால், அதற்கு பிரதிபலனாக அந்த பகுதி மீனவர்களுக்கு மட்டும் டீசல் மானியத்தை இன்னும் அதிகரியுங்கள். அவர்கள் கடலில் அதிக தொலைவு சென்று மீன்பிடிக்கட்டும். கட்டுமரம் வைத்திருப்பவர்களுக்கு மாத உதவி தொகை கொடுங்கள்.

அடுத்தது மக்கள் பாதுகாப்பில் என்ன தான் சமாதானம் சொன்னாலும் அதில் நிலவும் சந்தேகத்துக்கு மருந்து இல்லை. ஆக அந்தப் பகுதி மக்களுக்கு, நபர் ஒருவருக்கு குறைந்தது ஒரு கோடி ரூபாய் காப்பீடு செய்ய வேண்டும்(இதில் இழப்பீடு தனி). அந்தப் பகுதியில் வசிக்கும் எவர் ஒருவரும் அணுக்கதிர் வீச்சால் பாதிக்கப்பட்டதாக நிரூபிக்கப்பட்டால் இந்த தொகை உடனடியாக வழங்கப்பட வேண்டும். இந்த காப்பீடானது குழந்தை பிறப்பில் ஊனம் முதல் எத்தகைய உடல் பாதிப்பிற்கும் பொருந்த வேண்டும். அடுத்ததாக கூடங்குளத்தை சுற்றி உள்ள கிராம மக்களுக்கு ஆண்டு முழுமைக்கும் இலவச மின்சாரம் (போதுமான வரையரையுடன்) வழங்கப்பட வேண்டும். இதுதவிர அந்தப்பகுதி மக்களின் நியாயமான கோரிக்கைகளை தயவுதாட்சன்யம் இன்றி நிறைவேற்றி தரலாம். ஆனால் இங்கே அரசியலுக்கு இடம் தரக் கூடாது.

எனது ஒரு அறிவுரையாக இந்தப் பிரச்சனையில் அமைச்சர் நாராயணசாமி கருத்து சொல்லாமல் இருந்தால் அனைத்துக்கும் நல்லது. நமது ஊடகங்களும் நியாயமான யோசனைகளை முன் வைக்கலாம்(தினமலரைப் போல் பிக்காளித்தனமாக அல்ல). வேண்டியவர்கள் யோசிக்கட்டும்.

-சின்னப்பையன்

Thursday, November 3, 2011

முதலமைச்சரை வழிநடத்துவது யார்?

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சின்னப்பையனின் மனம் திறந்த மடல்.

வணக்கம் அம்மா. விசயத்துக்கு நேரடியாக வருகிறேன்.

தொடர் தேர்தல் வெற்றிகளின் மூலம் தமிழக மக்களாகிய நாங்கள் உங்களை அசைக்க முடியாத இடத்தில் வைத்திருக்கிறோம்.. சொல்லப் போனால் தமிழர்களின் கடைசி புகலிடம் நீங்கள் தான். ஆனால் நீங்களும் அதை தவறாக கையாண்டால் என்ன செய்வது? அல்லது உங்களை யாரும் கேள்வி கேட்டுவிட முடியாது என்ற இறுமாப்பா?

நீங்கள் எதையெல்லாம் செய்ய மாட்டீர்கள் என்று நாங்கள் நம்பினோமோ அதை தான் முதலில் செய்ய தொடங்கினீர்கள். கடந்த ஆட்சியில் கருணாநிதி அரசால் 1200 கோடியில் கட்டப்பட்டு அண்ணாசாலையின் அடையாளமாக திகழ்ந்த புதிய தலைமை செயலகத்துக்கு வந்தவுடன் சங்கு ஊதினீர்கள், பொறுத்துக்கொண்டோம். அடுத்ததாக சமச்சீர் கல்வி திட்டத்துக்கு சங்கு ஊத நீங்கள் எடுத்த பெரு முயற்சி , நீதியின் பெயரால் தோற்கடிக்கப்பட்டததே. இந்த வீண் வேலை தேவை தானா?

108 என்ற அவசர ஊர்தி திட்டம் முன்பு போல செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. அதை முடக்க வேண்டிய அவசியம் என்ன? இந்நிலையில் அண்ணா நூற்றாண்டு விழா நூலகத்தையும் முடக்கிவிடுவது என நீங்கள் திட்டம் போடுகிறீர்களே! இது என்ன நியாயம்? தமிழக வரலாற்றில் இடம் பிடிக்க கருணாநிதி கொண்டுவந்த திட்டமாக அது விளங்கினாலும் அதை அப்பட்டமாக முறியடிக்க நீங்கள் போடும் நாடகத்தை மக்கள் ரசிக்கவில்லை அம்மா. உங்களின் இந்த விபரீத எண்ணம் நீதிமன்றத்திடம் மீண்டும் ஒரு அவமானத்தை பெற்று தரலாம்.

உங்களுக்கு கருணாநிதியை பலி வாங்கும் எண்ணம் இருந்தால் அதற்கு ஆயிரம் வழிகள் உண்டு என்பதை அறிந்தவர் நீங்கள். ஆனால் ஒரு வல்லூறை பலி வாங்க துடிக்கும் உங்களின் எண்ணம், தவறான திசை நோக்கி செல்வதை நீங்கள் உணருகிறீர்களா? உங்களின் இந்த தவறான பாதை அந்த வல்லூறை தியாகி ஆக்கி விடப்போகிறது. அதை முதலில் உணருங்கள்.

இது போன்ற காரியங்களில் உங்களை இயக்குவது யார்? நீங்களே தானா? அல்லது உங்களிடம் இருக்கும் புல்லுருவிகளா? நீங்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் கிடக்கிறது. அதை முதலில் கையில் எடுங்கள். வீணாக சாக்கடையில் காலை விட்டு அதை கழுவ தண்ணீருக்கு ஓட வேண்டாம்.

நீங்கள் ஆட்சிக்கு வந்து இரண்டே மாதங்களில் மின்வெட்டை போக்குவதாக சொன்னீர்களே, அது குறித்த உங்கள் பதில் என்ன? விலைவாசியை குறைத்து விடுவதாக வீதிக்கு வீதி பேசீனீர்களே அது வெறும் வார்த்தைகள் தானா? இது பற்றியெல்லாம் ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட நீங்கள் தயாரா?

ஒன்று மட்டும் மறுக்க முடியாத உண்மை. உங்களுக்கும் இந்திய வரலாற்றில் அசைக்க முடியாத இடமுண்டு. அதை வலுப்படுத்திக் கொள்ள இன்னும் ஆக்கப்பூர்வமாக சிந்தியுங்கள். வீணாக வரலாற்றின் கருப்பு பக்கங்களை அலங்கரிக்க முயற்சிக்க வேண்டாம். அதை கருணாநிதி பார்த்துக் கொள்வார். உங்களின் அபார சிந்தனை அறிவை நல்ல திசைநோக்கி திருப்புங்கள். மக்களின் விருப்பம் எதுவென்று அறியுங்கள்? அதை நிரப்புங்கள். அது ஒன்றே தமிழகம் தாண்டி இந்திய மக்களின் அசைக்க முடியாத தலைவியாக உங்களை அலங்கரிக்கும்.









-சின்னப்பையன்